Wednesday, August 13, 2008

கடைசி மழைத்துளி..


பல வருடங்களுக்கு முன்னர் என்னிடத்தில் ஒரு புத்தகம் இருந்தது...இன்றும் கோவையில் எங்கோ ஒரு மூலையில் வீட்டில் இருக்கவேண்டும் (அது என்னவோ எங்கள் வீட்டில் புத்தகங்களை தொலைப்பது மிகக்கடினம்). அறிவுமதியின் கவிதைகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். "கடைசி மழைத்துளி" என்பது புத்தகத்தின் பெயர், அந்த வாசகம் மட்டும் ஏனோ இன்னும் நினைவில் நிற்கிறது. புத்தகத்தின் உள்ளே அந்த வாசகம் குறித்து எந்த கவிதையும் இல்லாததில் மிகவும் வருந்திய ஞாபகம். புத்தகங்களின் தலைப்பில் ஏனோ எனக்கு எப்போதும் ஒரு அணுக்கருதேடல். தலைப்பை கொண்டு ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்வது பழக்கமாக போய்விட்டது.

இன்று காலை வழக்கம் போல் ஒரு Tram (தொடருந்துப்) பயணம். பல நாள் இந்த 25 நிமிட பயணத்தில் வெறுத்துப்போயிருக்கிறேன். இன்று ஒரு பணி இருந்ததால் நான் வழக்கமாக செல்லும் சமயம் அல்லாமல் 9:30 மணி அளவில் பயணம் தள்ளி போயிற்று. ஒவ்வொரு நேரத்திலும் ஒரு வகையான மக்கள் கலப்பு பயணிக்கிறது. எனது வழக்கமான நேரத்தில் அலுவல் செல்பவர்களால் நிறைந்திருக்கும் வண்டி ஒரு மணி நேரத்தில் கல்லூரி மாணவர்களாலும், Supermarket செல்லும் தள்ளுவண்டி முதியவராலும் நிறைந்த ஒரு பரிணாமம் பெற்று விடுகிறது. ஒவ்வொரு கணமும் உலகத்தின் ஒரு புதிய அவதாரம், அது வேறு உலகம் என்று எங்கோ கால பயணம் (Time Travel) குறித்து படித்த நினைவுண்டு.

இன்று மாணவர்க்கு 'exam' போல. கூட்டமாகவும், தனியாகவும், படித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் பலர். ஜெர்மனிலும், ரஷியனிலும், சைனீசிலும், ஆங்கிலத்திலும் பேச்சு. அதே, டென்ஷனை மறைக்க சொல்லும் மகா மொக்கையான ஜோக்குகள், அதை சரியாக கேட்காவிட்டாலும் சிரித்துவைக்கும் நண்பர் கூட்டம், புத்தகங்களில் மார்க் செய்து படிக்கும் சில பேர், வீட்டிலேயே எல்லாம் படித்துவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்போடு உட்கார்ந்திருக்கும் சில பேர், டென்ஷனாக டவுட் கிளியர் செய்து கொள்ளும் சில பேர், சிறு பேப்பர் துண்டுகளில் டிப்ஸ் எழுதிய சில பேர், அதையே பிட்டாக Book செய்து வைத்துக்கொண்ட சில பேர் என்று என்னை கருப்பு-வெள்ளை டார்டாயிஸ் சுருள் போட்டு வருடங்களுக்கு முன்னர் கோவை காந்திபார்க்கில்லிருந்து சித்ரா வரை செல்லும் 36 ஆம் நம்பர் பஸ்சுக்கு இழுத்து சென்றன.

அவினாஷி ரோட்டில் கிட்டத்தட்ட 10-12 கல்லூரிகள் இருந்ததால் பரீட்சை சமயத்தில் வழக்கமாக பின்னிப் பரேடு கிளப்பும் bus கூட கொஞ்சம் அடங்கித்தான் போகும். "மாப்ளே, இந்த Question படிச்சியா", "இது எப்போடா நடத்தினாங்க" ( மாம்ஸ், நாம கட் போட்டுட்டு துள்ளுவதோ இளமை போனமே, அப்போ இருக்கும் என்று வெறுப்பேத்தும் மாப்ளே ஒருபுறம்), "அவன் சரியான மாக்காண்டா, என்ன எழுதனாலும் 20 க்கு மேல போட மாட்டான்", "Choiceல விட்ருவோம்டா", "டேய் மச்சி இதுல முக்கியமான ஒரு 4 Point சொல்லு, நான் அத வெச்சு கதை எழுதிக்கறேன்" ( கஷ்டப்பட்டு வீட்டில் இரவு முழுவதும் உருபோட்டதை வேண்டா வெறுப்பாக சொல்லும் 'படிப்ஸ்' ) , " டேய் இன்ஜினியரிங் டிராயிங் பரீட்சைக்கு Drafter மறந்திட்டு வர, என்ன பெரிய ரௌஸுன்னு நெனப்பா , சரி விடு ஹாஸ்டேல் மக்கள்கிட்ட தேத்திக்கலாம்",

பஸ்ஸில் இருந்து Exam Hall கடைசி நிமிடம் வரை முக்கியமான கேள்விகளை தேடி கண்டுபிடித்து ( இது வரை வாழ்க்கையில் ஒரு முறை கூட படித்த முக்கியமான கேள்விகள் வந்ததே இல்லை, உங்களில் யாரேனும் உலகநாயகன்/கி உண்டா?), இரண்டாம் பெல் அடித்ததும் உள்ளே பெஞ்சில் உட்கார்ந்தால் Examiner பியூனிடம் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார். இல்லை சனியன் பெல் அடிக்காது. இல்லை Question Paper வந்து சேர்ந்திருக்காது.

அந்த நான்கு நிமிடங்கள், பத்து நாட்கள் முன்னர் Plan போட்டு படித்தவன் துவங்கி, பாதி புக்கை Choice இல் விடத்துணிந்தவன் கடந்து, Pant முழுதும் பிட் வைத்திருப்பவன் வரை எல்லோருடைய கண்ணிலும் தெரியும் - ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பும், தறி ஓடும் கால்களிலும், கடிக்கப்படும் பிறை நகங்களிலும், பெஞ்சில் மும்முரமாக வரையப்படும் ஓவியங்களிலும் - செதுக்கப்பட்ட ஒரு உறைந்த கணம். பேருந்தின் ஆரவார மழை அடங்கி புல்லின் நுனியில் புவியின் ஈர்ப்பால் தனியாக தேங்கிக்கிடக்கும் அந்த கடைசி மழைத்துளியின் தவிப்பும் அதுதானோ...

No comments: